Archives: மே 2021

ரகசியமாகக் கொடுப்பவர்

உடல் ஊனமுற்ற வீரரான கிறிஸ்டோபரைப் பொறுத்தவரை, அன்றாட நடவடிக்கைகள் மிகவும் சவாலானதாகிவிட்டது. அவைகளை செய்து முடிக்க அதிக நேரம் பிடித்தது. அது அவரது வலியை அதிகரித்தது. ஆனாலும், அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளின் பொருட்டு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தார். ஒவ்வொரு வாரமும் அவர் தனது தோட்டத்தில் கடினமாக உழைப்பதை வழிப்போக்கர்கள் பார்ப்பார்கள்.

ஒரு நாள் கிறிஸ்டோபருக்கு ஒரு கடிதமும் அவரது தோட்ட வேலைகளில் அவருக்கு உதவ ஒரு விலையுயர்ந்த இயந்திரமும் அறியப்படாத நன்கொடையாளரிடமிருந்து வந்திருந்தது. தேவைப்படுபவருக்கு ரகசியமாய் உதவுவதின் பாக்கியத்தை பெறுவதின் மூலம் கொடுத்த அந்த நபர் திருப்தியடைந்தார்.

இயேசு நாம் கொடுப்பது அனைத்துமே இரகசியமாக இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் நாம் கொடுக்கும்போது நம்முடைய நோக்கங்களை சரிபார்க்க அவர் நமக்கு நினைவூட்டுகிறார் (மத்தேயு 6:1). அவர் மேலும் சொன்னார்: “ஆகையால் நீ தர்மஞ்செய்யும்போது, மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாகத் தாரை ஊதுவியாதே” (வச.2). நாம் மனமுவந்து கொடுக்கிறவர்களாக இருக்க வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார். பாராட்டுக்களை பெறுவதற்கோ அல்லது சிறப்பு அங்கீகாரம் பெறுவதற்கோ மக்கள் முன் நல்ல செயல்களை செய்வதை தவிர்க்க அவர்களை ஊக்குவிக்கிறார் (வச. 3). 

நம்மிடம் உள்ள அனைத்தும் தேவனிடமிருந்து கிடைத்தது என்பதை நாம் உணரும்போது, நம்முடைய முதுகில் யாரும் தட்டி கொடுக்கவோ அல்லது மற்றவர்களின் புகழைப் பெறவோ நாம் விரும்பமாட்டோம். ரகசியமாய் உதவிசெய்வதில் திருப்தியுள்ளவர்களாய் இருக்கமுடியும். நமக்கு நன்மைகளை பெருகச்செய்யும் எல்லாம் அறிந்த தேவன், தாராளமாய் கொடுப்பவர்கள் மீது பிரியமாயுள்ளார். அவருடைய ஒப்புதலின் வெகுமதியை எதுவும் தடுக்க முடியாது.

எனக்கு தகுதியானதா அல்லது நான் தகுதியுள்ளவனா?

ஆப்பிரிக்க நாட்டின் காங்கோ பகுதியில் ஆங்கில மிஷனரி மருத்துவரான ஹெலன் ரோஸ்வேர் 1964இல் ஏற்பட்ட சிம்பா கிளர்ச்சியின்போது கிளர்ச்சியாளர்களால் சிறைபிடிக்கப்பட்டார். அவர் அவர்களால் தாக்கப்பட்டு, தவறாய் கையாளப்பட்டதால், அவர் மிகவும் பாதிக்கப்பட்டார். தொடர்ந்த நாட்களில், “இது எனக்கு தகுதியானதா?” என்று தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டார்.

இயேசுவைப் பின்தொடர்வதற்கான கிரயத்தை அவள் சிந்திக்கத் தொடங்கினபோது, தேவன் அதைப் பற்றி அவளிடம் பேசுவதை உணர்ந்தாள். பல வருடங்கள் கழித்து அவள் ஒரு நேர்காணலுக்கு பேட்டியளிக்கும்போது, “கிளர்ச்சியின் மிகவும் மோசமான தருணங்களில், கர்த்தர் என்னிடம், “இது எனக்கு தகுதியானதா?” என்னும் கேள்வியை மாற்றி “நான் இதற்கு தகுதியானவளா?” என்று கேட்கும்படி எனக்கு உணர்த்தினார். அவளுடைய வலி மிகுந்த வேதனைக்கு மத்தியிலும் “ஆம்! அவர் தகுதியானவர்” என்னும் முடிவுக்கு தான் வந்ததாக அறிவித்தார். 

தனது துன்பகரமான சோதனையின்போது அவளுக்குள் இருந்த தேவ கிருபையின் மூலம், ஹெலன் ரோஸ்வேர், அவருக்காக மரணத்தை கூட அனுபவித்த மீட்பருக்காக எதையும் சகிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார். “அவர் தகுதியானவர்” என்ற அவரது வார்த்தைகள் வெளிப்படுத்துதல் புத்தகத்தில் இயேசுவின் சிங்காசனத்தைச் சுற்றியுள்ளவர்களின் அழுகையை எதிரொலிக்கின்றன: “அவர்களும் மகா சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் என்று சொன்னார்கள்!” (5:12).

நம்முடைய இரட்சகர் நமக்காக துன்பப்பட்டு, இரத்தம் சிந்தி மரித்தார்; நித்திய ஜீவனையும் நம்பிக்கையையும் இலவசமாக நாம் பெறுவதற்காக, தன்னை முழுவதுமாக ஒப்புக்கொடுத்தார். அவருடைய அனைத்துமே நம் அனைவருக்கும் தகுதியானவை. அவர் தகுதியானவர்!

மரண மண்டலம்

2019 ஆம் ஆண்டில், ஒரு மலை ஏறுபவர் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சத்திலிருந்து தனது கடைசி சூரிய உதயத்தைக் கண்டார். அவர் ஆபத்தான ஏறுதலில் இருந்து தப்பினார். ஆனால் உயரமான இடம் அவரது இதயத்தை கசக்கியது. மேலும் அவர் மலையேற்றத்தில் இறந்தார். ஒரு மருத்துவ நிபுணர், மலை ஏறுபவர்கள் சிகரத்தின் உச்சத்தை தங்களுடைய பயணத்தின் முடிவாக எண்ணவேண்டாம் என எச்சரிக்கிறார். “அவர்கள் மரண மண்டலத்தில் இருக்கிறார்கள்” என்பதை நினைவில் வைத்துக் கொண்டு, அவர்கள் விரைவாக புற்பபட்டு கீழே வர வேண்டும்.

தாவீது தனது ஆபத்தான ஏறுதலில் இருந்து தப்பினார். அவர் சிங்கங்களையும் கரடிகளையும் கொன்றார். கோலியாத்தை கொன்றார். சவுலின் ஈட்டியைத் எடுத்து இராணுவத்தைத் தொடர்ந்தார். பெலிஸ்தர்களையும் அம்மோனியர்களையும் வென்று மலையின் உச்சத்தை அடைந்தார்.

ஆனால் தாவீது, தான் மரண மண்டலத்தில் இருப்பதை மறந்துவிட்டார். அவரது வெற்றியின் உச்சத்தில், “தாவீது போன இடத்திலெல்லாம் கர்த்தர் அவனைக் காப்பாற்றினார்” (2 சாமுவேல் 8: 6). அவர் விபச்சாரம் மற்றும் கொலை போன்ற செய்கைகளிலும் ஈடுபட்டார். அது அவரது ஆரம்ப தவறு? அவர் மலை உச்சியில் நீடித்தார். அவருடைய இராணுவம் புதிய சவால்களுக்கு புறப்பட்டபோது, அவர் “எருசலேமில் இருந்துவிட்டான்” (11:1). தாவீது ஒருமுறை கோலியாத்தை எதிர்த்துப் போராட முன்வந்தார்; இப்போது அவர் தனது வெற்றிகளின் பாராட்டுகளில் நிதானமாக இருந்தார்.

தேவன் உட்பட எல்லோரும் நீங்கள் சிறப்புடையவர் என்று கூறும்போது நிதானமாக தலைக்கணம் இல்லாமல் இருப்பது கடினம் (7:11-16). ஆனால் நாம் அப்படி தான் இருக்க வேண்டும். நாம் சில வெற்றிகளைப் பெறும்போது, நமது சாதனையை சரியான முறையில் கொண்டாடலாம், வாழ்த்துக்களை ஏற்கலாம். ஆனால் நாம் தொடர்ந்து பயணம் செய்யவேண்டும். நாம் மரண மண்டலத்தில் இருக்கிறோம். மலையிலிருந்து கீழே இறங்கவேண்டும். உங்கள் இருதயத்தையும் உங்கள் நடைகளையும் பாதுகாக்கும்படி தேவனிடம் கேட்டு, பள்ளத்தாக்கில் உள்ள மற்றவர்களுக்கு பணிவுடன் சேவை செய்யுங்கள்.

வானவில் ஒளிவட்டம்

மலை உச்சியல் தாழ்வான மேகங்களுக்கு பின்பாக ஒளிருகின்ற காட்சியை அட்ரியன் பார்வையிட்டார். கீழே பார்த்தபோது, அவரது நிழலை மட்டுமல்ல, சிதயிருந்த வண்ணப் பட்டி (ப்ரோக்கன் ஸ்பெக்டர்) என்று அழைக்கப்படும் ஒரு அற்புதமான காட்சியையும் பார்த்தார். இந்த நிகழ்வு ஒரு வானவில் ஒளிவட்டத்தை ஒத்திருந்தது. இது அந்த நபரின் நிழலை சுற்றி வளைந்திருந்தது. சூரிய ஒளி கீழே உள்ள மேகங்களை பிரதிபலிக்கும் போது இது நிகழ்கிறது. அட்ரியன் அதை ஒரு “மந்திர” தருணம் என்று கூறுகிறார். இது அவரை மிகவும் மகிழ்வித்தது.

முதல் வானவில்லை பார்த்த உணர்வு நோவாவுக்கு எவ்வளவு அதிர்ச்சியாக இருந்திருக்கும் என்பதை நாம் கற்பனை செய்யலாம். அவரது கண்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்ததை காட்டிலும், ஒளிவிலகலும் வெளிச்சமும் அதன் விளைவாக வரும் வண்ணங்களும் தேவனிடமிருந்து ஒரு வாக்குறுதியுடன் வந்தன. ஒரு பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்திற்குப் பிறகு, நோவாவுக்கும், பின்னர் வாழ்ந்த எல்லா “மாம்ச ஜீவன்களுக்கும்”, “இனி ஜலமானது பிரளயமாய்ப் (பெருகாதபடிக்கு) எனக்கும் உங்களுக்கும் மாம்சமான சகல ஜீவஜந்துக்களுக்கும் உண்டான என் உடன்படிக்கையை நினைவுகூருவேன் (ஆதியாகமம் 9:15) என்று தேவன் உடன்படிக்கை ஏற்படுத்துகிறார்.

நம் பூமி இன்னமும் வெள்ளம் மற்றும் பிற பயமுறுத்தும் சீதோஷ நிலை ஆகியவற்றை அனுபவிக்கிறது. அது துன்பகரமான இழப்பையும் அவ்வப்போது ஏற்படுத்துகிறது. ஆனால் வானவில் என்பது உலகளாவிய வெள்ளத்தால் பூமியை மீண்டும் தேவன் அழிக்கமாட்டார் என்பதற்கான வாக்குறுதியாகும். அவருடைய விசுவாசத்தின் இந்த வாக்குறுதி, இந்த பூமியில் தனிப்பட்ட இழப்புகள் மற்றும் உடல் ரீதியான மரணங்களை நாம் தனித்தனியாக அனுபவிப்போம் என்றாலும், நோய், இயற்கை பேரழிவு, தவறு, அல்லது வயது முதிர்வால் நாம் எதிர்கொள்ளும் சிரமங்கள் முழுவதும் தேவன் தம்முடைய அன்பையும் முன்னிலையையும் கொண்டு நம்மை மேம்படுத்துகிறார். சூரிய ஒளியானது நீரின் மூலம் வண்ணங்களை பிரதிபலிக்கிறது, அவருடைய உருவத்தைத் தாங்கி, அவருடைய மகிமையை மற்றவர்களுக்கு பிரதிபலிப்பவர்களால் பூமியை நிரப்ப அவர் உண்மையுள்ளவர் என்பதை நினைவூட்டுகிறது.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

இடமாற்றம்

2020-ல் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியபோது, எனது நண்பர் ஜோன் மாரடைப்பால் இறந்துவிட்டார். முதலில் அவரது குடும்பத்தார், தங்களது திருச்சபையில் அவரது நினைவுச் சடங்கு நடைபெறும் என்று அறிவித்தனர். ஆனால் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அதை வீட்டில் நடத்துவது நல்லது என்று பின்னர் தீர்மானிக்கப்பட்டது. அதை மக்களுக்கு தெரிவிப்பதற்காக “ஜோன் வார்னர்ஸ் - இடமாற்றம்!” என்று ஆன்லைனில் புதிய அறிவிப்பு போடப்பட்டது. 

ஆம், அவருடைய குடியிருப்பு இடம் மாறிவிட்டது! அவர் பூமியிலிருந்து பரலோகத்திற்கு சென்றுவிட்டார். தேவன் அவருடைய வாழ்க்கையை பல ஆண்டுகளுக்கு முன்பே மறுரூபமாக்கியிருந்தார். அவர் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக தேவனுக்கு அன்புடன் ஊழியம் செய்தார். மருத்துவமனையில் இறக்கும் தருவாயில் கிடந்தபோதும், போராடிக்கொண்டிருக்கும் தனக்குப் பிடித்த மற்றவர்களைப் பற்றிக் கேட்டார். இப்போது அவர் தேவனோடு இருக்கிறார். அவருடைய குடியிருப்பு மாற்றப்பட்டுவிட்டது. 

அப்போஸ்தலனாகிய பவுலுக்கு, கிறிஸ்துவுடன் வேறொரு இடத்தில் இருக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது (2 கொரிந்தியர் 5:8). ஆனால் மக்களுக்கு ஊழியம் செய்வதற்காக, அவர் பூமியில் தங்கியிருக்கவேண்டியது அவசியம் என்று கருதினார். அவர் பிலிப்பியர்களுக்கு எழுதியபோது, “அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்” (பிலிப்பியர் 1:24) என்று எழுதுகிறார். ஜோன் போன்ற ஒருவருக்காக நாம் துக்கப்படுகையில், அவர்கள் இப்பூமியில் பலருக்கு அவசியப்படலாம் என்று நீங்கள் தேவனிடத்தில் விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்களுடைய குடியிருப்பை மாற்றுவதற்கென்று தேவன் உகந்த நேரத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார். 

ஆவியின் பெலத்தில், தேவனை முகமுகமாய் தரிசிக்கும் நாள் வரும்வரை, இப்போது “அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க நாடுகிறோம்” (2 கொரிந்தியர் 5:9). அதுவே நமக்கு மேன்மையாயிருக்கும்.  

 

கர்த்தருடைய கரத்தின் கிரியை

ஜூலை 12, 2022 அன்று, புதிய ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியில் இருந்து ஆழமான விண்வெளியின் முதல் படங்களை விஞ்ஞானிகள் எதிர்பார்த்தனர். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தொலைநோக்கிகளைவிட இதன் மூலம் பிரபஞ்சத்தை வெகு தொலைவில் பார்க்க முடியும். திடீரென்று ஒரு மூச்சடைக்கக்கூடிய படம் வெளிப்படுகிறது: கரினா நெபுலாவின் ஓர் வண்ண இடைவெளி, இதுபோல் இதுவரை பார்த்ததில்லை. அப்போது நாசா விஞ்ஞானி ஒருவர், “எங்கேயோ, நம்பமுடியாத ஒன்று நமக்குக் காத்திருக்கிறது" என்று ஓர் பிரபலமான நாத்திகர் கார்ல் சாகனின் வாக்கியத்தை மேற்கோள் காட்டினார்.

சில சமயங்களில் மக்கள் தேவனைக் கண்ணால் கண்டும் உணராதிருக்கிறார்கள். ஆனால் சங்கீதக்காரன் தாவீது வானத்தைப் பார்த்து, “உம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்தீர்” (சங்கீதம் 8:1) என்று அவன் பார்த்ததை சரியாய் அடையாளம் கண்டுகொண்டான். “நம்பமுடியாத ஒன்று காத்திருக்கிறது” என்று சாகன் சொன்னது சரிதான். ஆனால் தாவீது பார்த்ததை அவர் பார்க்க தவறிவிட்டார். “உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது, மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்” (வச. 3-4). 

ஆழமான விண்வெளியின் படங்களைப் பார்க்கும்போது, நாம் வியப்படைகிறோம். தொழில்நுட்பத்தின் காரணமாக அல்ல, மாறாக, தேவனுடைய கரத்தின் கிரியையை நாம் சாட்சியிடுவதினால். ஏனென்றால் அவருடைய கரத்தில் கிரியைகளின்மீது தேவன் நமக்கு ஆளுகைக் கொடுத்திருக்கிறார் (வச. 6). உண்மையில் “நம்பமுடியாத ஒன்று நமக்குக் காத்திருக்கிறது.” கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட அனைவரையும் அவரிடமாய் ஏற்றுக்கொள்ள தேவன் ஆயத்தமாயிருக்கிறார். இதுவே ஆச்சரியமான வெளிப்பாடாகும். 

 

மகிழ்ச்சியும் ஞானமும்

அடால்ஃப் ஹிட்லர், சிறிய பொய்களைவிட பெரிய பொய்கள் சக்திவாய்ந்தவை என்று நம்பினார். மேலும் அவர் தனது கோட்பாட்டை வெற்றிகரமாக பரிசோதித்தார். அவரது அரசியல் வாழ்க்கையின் ஆரம்பத்தில், அவர் மற்றவர்களின் கருத்துக்களை ஆதரிப்பதில் திருப்தி அடைவதாகக் கூறினார். அவர் ஆட்சிக்கு வந்ததும், யாரையும் துன்புறுத்தவேண்டும் என்ற எண்ணம் தனது கட்சிக்கு இல்லை என்றார். பின்னர், ஊடகங்களை பயன்படுத்தி தன்னை தகப்பனாகவும் ஒழுக்க நெறியாளராகவும் சித்தரித்தார்.

சாத்தான் நம் வாழ்வில் வல்லமை பெற பொய்களைப் பயன்படுத்துகிறான். அனைத்து தருணங்களிலும், அவன் பயம், கோபம் மற்றும் விரக்தியைத் தூண்டுகிறான். ஏனெனில் அவன் “பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாய்” இருக்கிறான் (யோவான் 8:44). சாத்தானால் உண்மையைச் சொல்லமுடியாது, ஏனென்றால் இயேசு சொன்னதுபோல், அவனுக்குள் எந்த உண்மையும் இல்லை.

சாத்தானின் பொய்களில் சிலவைகள் இங்கே. முதலில், நமது பிரார்த்தனைகள் முக்கியமில்லை என்பதே. “நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும்பெலனுள்ளதாயிருக்கிறது” (யாக்கோபு 5:16) என்று வேதம் சொல்லுகிறது. இரண்டாவது பொய், “நாம் சிக்கலில் இருக்கும்போது, அதிலிருந்து வெளியேற வழியே இல்லை” என்பதே. இதுவும் தவறானது. “தேவனாலே எல்லாம் கூடும்” (மாற்கு 10:27) என்றும் “சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்” (1 கொரிந்தியர் 10:13) என்றும் வேதம் வாக்களிக்கிறது. மூன்றாவதாக, “தேவன் நம்மை நேசிப்பதில்லை” என்னும் பொய். அது உண்மையல்ல. நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள “தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாது” (ரோமர் 8:38-39).

தேவனுடைய சத்தியம் பொய்யைவிட சக்தி வாய்ந்தது. இயேசுவின் போதனைக்கு நாம் அவருடைய வல்லமையில் கீழ்ப்படிந்தால், நாம் "சத்தியத்தை அறிவோம்", பொய்யானதை நிராகரிப்போம். “சத்தியம் நம்மை விடுதலையாக்கும்” (யோவான் 8:31-32).